தா.பேட்டை, டிச.16: திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் நளினி, முசிறி அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் அகிலா ஆகியோர் தா.பேட்டை ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்து தமிழ் கல்வெட்டுகளை படித்து, படி எடுத்துள்ளனர்.இதுகுறித்து டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் கூறியதாவது: தா.பேட்டை அருகே பாப்பாபட்டி கிராமத்தில் பலகைகள் சிற்பங்களில் ஒன்று படம் எடுத்தவாறு நெளியும் பாம்பை காட்சிப் படுத்துவதாகவும் மற்றொன்று இரண்டு பாம்புகளின் பிணைப்பை காட்டுவதாகவும் உள்ளது. பாம்புகளின் உடல் பிணைப்பால் உருவாகியிருக்கும் இரு வளையங்களில் மேலே லிங்கத் திருமேனியும் கீழ் வளையத்தில் மலர் பதக்கத்தையும் சிற்பி செதுக்கி உள்ளார். சதுரமான ஆவுடையார் மீது உருளை பானம் கொண்டு விளங்கும் லிங்கத் திருமேனியில் மலர்ச்சரம் சூட்டப்பட்டுள்ளது. வளையத்தை முழுவதுமாய் நிறைத்துள்ள மலர் பதக்கம் நன்கு விரிந்த இதழ்களுடன் காட்சி தருகிறது. இதை உருவாக்கியவர் அய்யண்ணன் என்பதை சிற்பத்தின் கீழே உள்ள கல்வெட்டுப் பொறிப்பு தெளிவாக்குகிறது. பரப்பின் மேற்பகுதியில் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்ட நிலையில் உள்ள பெரும் பாறை ஒன்றின் கீழ் பகுதியை நன்கு செதுக்கி தளத்தை சமன்படுத்தி 14 வரிகள் உள்ள தமிழ் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சமப்படுத்தபட்டுள்ள தளத்தில் மழைநீர் தேங்காதிருக்க நீர்வடி வழி ஒன்றும் பாறை விளிம்பில் செதுக்கப்பட்டுள்ளது. 14 வரிகளில் ஒருவரி மட்டுமே சற்று நீளமாக அமைந்துள்ளது. விளம்பி ஆண்டு தைத்திங்கள் 14ம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு அய்யண்ணன் என்பாரின் தலைமையில் உள்ள வேங்கடேசுவர சுவாமி திருமுன்னுக்கு படி மண்டபம் கட்டியதை அறிய முடிகிறது.