தக்கலை, டிச.11: வேளிமலை குமாரகோவிலுக்கு போலீஸ், பொதுப்பணி துறை மற்றும் பக்தர்களின் பல்வேறு காவடி பவனி 13ம் தேதி நடக்கிறது.
கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று தக்கலையை அடுத்த வேளிமலை குமாரசாமி கோயிலுக்கு விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. தக்கலை போலீஸ் ஸ்டேஷன், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவற்றில் இருந்தும் மலர் காவடிகள் யானை ஊர்வலத்துடன் செல்வது வழக்கம். போலீஸ் காவடியின் போது விரதம் மேற்கொண்டுள்ள போலீசார் காவடி எடு்த்துச் செல்வர்.
தக்கலை, பாரதிநகர், பத்மநாபபுரம், வெட்டிக்கோணம், புலியூர்குறிச்சி, தென்கரை, பிரம்மபுரம், வில்லுக்குறி, இரணியல், ஆழ்வார்கோவில், வழிக்கலம்பாடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் வேல் காவடி, பறக்கும் காவடி, மலர் காவடி, சூர்ய காவடி, பால் காவடி, பன்னீர் காவடி ஆகியனவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்வர். அனைத்து காவடிகளும் கோவிலை வந்தடைந்த பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். இந்த ஆண்டு காவடிக்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள பக்தர்கள் செய்து வருகின்றனர்.