×

மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட ஜவுளிகடைக்கு ₹50 ஆயிரம் அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில், ஏப். 26: நாகர்கோவிலில் செப்டிக் டேங்க் கழிவை மழைநீர் வடிகாலில் நேரடியாக விட்ட ஜவுளிகடைக்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் வணிக நிறுவனங்களில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுகளை மழைநீர் வடிகாலில் விடுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இந்த நிலையில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில் மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் பாண்டியராஜன், மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஒரு ஜவுளி கடையில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுகள் நேரடியாக மழைநீர் வடிகாலில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இதனை தொடர்ந்து அந்த ஜவுளி கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 3 நாட்களுக்குள் செப்டிக் டேங்க் கழிவு மழைநீர் வடிகாலுக்கு வருவதை தடை செய்யவில்லை என்றால் ஜவுளி கடைக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளி கடை நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதனால் செம்மாங்குடி ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட ஜவுளிகடைக்கு ₹50 ஆயிரம் அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...