திருச்சுழி, டிச. 9: மதுரை விரகனூர் அணைக்கட்டு வழியாக வைகை நதி நீரை, நரிக்குடி பகுதி கிருதுமால் நதிக்கு திறந்துவிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், விரகனூரிலிருந்து அம்பலத்தாடி அணைக்கட்டு வழியாக கட்டனூர், மானூர், வீரசோழன் வழியாக கமுதி வரை கிருதுமால் நதி செல்கிறது. இந்நதி மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வைகையாற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் கிருதுமால் நதியில் மண்மேவி, முட்கள் வளர்ந்தன. இதை தூர்வார விவசாய சங்கம் போராடியதன் விளைவாக ரூ.120 கோடியில் விரகனூரிலிருந்து கமுதி வரை தூர்வாரும் பணி நடந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாக கிருதுமால் நதியில் நீர்வரத்து இல்லாததால், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால் வைகையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் கலந்தது.