உடுமலை,டிச.1: திருமூர்த்தி மலை மீது அமைந்துள்ள உலக சமாதான ஆலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஆயிஷா மருத்துவ குழும, சி.இ.ஓ., டாக்டர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆயுஷா ஒருங்கிணைந்த மருத்துவ குழுமம் மற்றும் ஆயுஷ்பதி அசோசியேஷன் இணைந்து நீரிழிவு குறைபாட்டை முழுமையாக நீக்குவதற்கான சிகிச்சை முறை குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக டிசம்பர் 1ம் தேதி(இன்று) உலக சமாதான ஆலயத்தில் சர்வதேச கருத்தரங்கத்தை நடத்த உள்ளோம். இக்கருத்தரங்கத்தில் அலோபதி, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு அவரவர் செய்து வரும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பதோடு, பேசவும் உள்ளனர். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது குறித்தும் வருங்கால சந்ததியினரை நீரிழிவு தாக்காத வண்ணம் காக்கின்ற வகையில் அனைத்து தரப்பு மருத்துவமுறைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். இக்கருத்தரங்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.