கிருஷ்ணகிரி, நவ.20: கிருஷ்ணகிரியில் நாளை(21ம் தேதி) அதிமுக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறானது பெங்களூரு வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம் அணை கட்டியதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை தமிழக அரசு முறையாக கையாளாததால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட திமுக சார்பில் நாளை(21ம் தேதி) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.