வி.கே.புரம், நவ. 20: வி.கே.புரத்தில் சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் காஞ்சனா எச்சரிக்கை விடுத்துள்ளார். வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடு, மாடுகள் திரிகின்றன. இரவு நேரங்களில் இவை சாலையை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால் தெருவிளக்கு இல்லாத பகுதியில் வரும் வாகனங்கள், கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் திரியும் கால்நடைகள், திடீரென சண்டையிட்டு வாகனங்களில் மோதுகின்றன. இதனால் வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து உயிரிழக்கும் அபாயமும் காணப்படுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வி.கே.புரம் இந்து முன்னணியினர் நகராட்சி ஆணையாளர் காஞ்சனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.