கிருஷ்ணகிரி, நவ.13: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஊழியர்-மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் நேற்று பிரசார பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், ஊழியர்-மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில், கடந்த 11ம் தேதி முதல் 15ம்தேதி வரை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய பிரசார பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர். ஓசூர் ரயில் நிலையத்தில் நடந்த பிரசாரத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நடராஜன் வரவேற்றார். மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைத் தலைவர்கள் பெரியசாமி, பழனியம்மாள் ஆகியோர் பேசினர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார். இதில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண்.56 ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள நாலரை லட்சம் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி கோட்டை நோக்கி பேரணி துவங்க உள்ளது. இதே போன்று ஓசூர் பிடிஓ அலுவலகம், ஓசூர் சார் நிலைக் கருவூல அலுவலகம், கிருஷ்ணகிரி பிடிஓ அலுவலகம் ஆகிய இடங்களிலும் இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.