பள்ளிபாளையம், நவ.12: அனுமதி பெறப்பட்ட அளவை விட அதிகப்படியாக சாயமிடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிறுவனத்துக்கு தினம் ₹5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படுமென மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி எச்சரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சாயப்பட்டறை ஒழுங்காற்று கூட்டம் நேற்று நடைபெற்றது. மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பறக்கும்படை பொறியாளர் சாமிநாதன் தலைமை தாங்கி பேசினார். உதவி பொறியாளர் செல்வகுமார், சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி மற்றும் 53 சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் பேசியதாவது: சமயசங்கிலி மற்றும் களியனூர் பகுதியில் அனுமதி பெற்று அமைக்கப்பட்ட 2 சாயப்பட்டறைகளில், அனுமதி வழங்கப்படும் முன்பே இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 2 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அனுமதி பெறப்பட்ட சாயப்பட்டறைகளில் காற்று ஏற்றும் தொட்டி தொடர்ந்து இயங்குவதை கண்காணிக்க, அங்கு துணை மீட்டரை உடனடியாக பொறுத்த வேண்டும்.