திருவில்லிபுத்தூர், நவ.8: திருவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் பெரியகுளம் கண்மாய் கரை மண் படிவதால் டூவீலர்கள் தடுமாறி விழும் அபாயம் நிலவுகிறது. திருவில்லிபுத்தூர் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளம் கண்மாய் கரை எல்ஐசி அலுவலகம் அருகே தொடங்கி, மடவார் வளாகம் மயானம் அருகே வரை 2 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளது. பல மாதங்களுக்கு முன்பு கண்மாயின் கரை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது மண் மட்டுமே போட்டு கரையை பலப்படுத்தியதோடு பணியை முடித்துக் கொண்டனர். மழைக்காலங்களில் கரை மண் கரைவதை தடுக்க அலைக்கற்கள் பதிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மண் படிந்து விடுகிறது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் பெரியகுளம் கண்மாய் கரையில் அலைக்கற்கள் பதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.