வள்ளியூர், நவ. 7: நெல்லை - கன்னியாகுமரி இடையே வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று, வள்ளியூர். இங்கிருந்து தொழில் ரீதியாக வியாபாரிகளும், கல்வி பயில்வதற்காக மாணவ, மாணவிகளும் தினமும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். வள்ளியூரில் இருந்து கூடங்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக வள்ளியூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கிராசிங்கை கடந்துதான் செல்ல வேண்டும். இவ்வழியாக ரயில்கள் செல்லும்போது கேட் அடைக்கப்படுவதால் காத்திருக்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அப்பகுதியில் தரைதள மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதையேற்று ரயில்வே துறை, கடந்த 2017 ஜூனில் ரூ.4.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கியது. அப்பகுதியில் போக்குவரத்துக்காக தற்காலிக சாலையும் அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி முதல் சுரங்கப்பாதை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ரயில்வே பணிகளை தொடர்ந்து தரைதளம் மற்றும் சாலைகள் அமைக்க தமிழக பொதுப்பணிதுறை மூலம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பமானது. ஆனால் இந்த பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது.