தர்மபுரி, நவ.7: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இயங்கி வரும் அகில இந்திய வானொலியின், தர்மபுரி பண்பலை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுவதை, தற்போது இரவு 11.05 மணி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், வானொலி நிலையத்தில், நேர நீட்டிக்கப்பட்ட நிகழ்ச்சி ஒலிபரப்பு மற்றும் செயல்பாடுகளை தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். நிகழ்ச்சி ஒலிபரப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, நிருபர்களிடம் எம்பி செந்தில்குமார் கூறியதாவது: தர்மபுரி பண்பலை வானொலி நிலையம் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இந்நிகழ்ச்சிகளின் நேரத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நேரில் சந்தித்து கோரிக்கையை முன் வைத்தேன். இதையடுத்து, இந்த மாதம் முதல் தேதியிலிருந்து தர்மபுரி அகில இந்திய வானொலி பண்பலை நிகழ்ச்சிகளை, இரவு 11.05 மணிவரை நேர நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.