கிருஷ்ணகிரி, நவ.7: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. தொடர்ந்து 52 அடி தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய பணிகள் மற்றும் மக்களின் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணகிரி கேஆர்பி அணை முக்கிய பங்கு வகுக்கிறது. அணையின் மொத்த உயரம் 52 அடியாகும். மழை பெய்யும் நாட்களில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாய பணிக்கும், குடிநீர் தேவை மற்றும் அருகில் உள்ள ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட கிராம பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தில் பருவமழையின் போது 41.80 அடியாக நீர்மட்டம் இருந்தது. தொடர்ந்து மழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது மழை முற்றிலும் குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீர் வெகுவாக குறைந்துள்ளது.