துரைப்பாக்கம்: சென்னை, பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (28). காரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் முரளி வழக்கம்போல் பணிக்கு வந்துவிட்டு அருகில் உள்ள கடையில் நின்று தேனீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒருவர் முரளியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்றார். இதில் முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து முரளியின் மனைவி கவுசல்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்ணகிநகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலை செய்தவர் யார்? கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முரளி பணிபுரிந்து வந்த அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த லட்சுமியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் சுமார் 3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர். பின்னர், லட்சுமி அரவிந்தன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதேப்போல் முரளியும் கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.