பெரம்பூர் : தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி, வெங்காயத்தை பதுக்கி வைத்து விலை உயர்வை ஏற்படுத்தி கள்ள சந்தையில் வெங்காயம் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. அதன்பேரில், பெரம்பூர் மண்டலம் பகுதியில் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை அறிய அதிகாரிகள் சார்பில், கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பெரம்பூர், நெல்வயல் சாலையில் உள்ள காய்கறி அங்காடிகள், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள பல்பொருள் அங்காடி, வியாசர்பாடி மார்கெட், சர்மா நகர் மார்க்கெட், எருக்கசேரியில் உள்ள மொத்தவிலை கடைகள், பெரம்பூரை சுற்றியுள்ள சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் என ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.