ஓசூர், நவ.1: ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 968 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.ர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, தொட்டப்பள்ளப்புரம், கே.ஆர்.புரம், பெங்களூரு, சர்ஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் 808 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 968 கனஅடியானது.
அப்போது, அணையின் நீர்மட்டம் 41.66 அடியாக இருந்தது(மொத்த கொள்ளவு 44.28 அடி). இதனால், அணையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு உபரிநீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி அணை நோக்கி பெருக்கெடுத்துச் செல்வதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 984 கன அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 42.30 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, 984 கன அடி தண்ணீரும் பாசன கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது- இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது.