கிருஷ்ணகிரி, அக்.27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகளில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், அவ்வாறான பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை சிறு குழந்தைகள் தவறி விழுந்திடாத வகையில் உடனடியாக பாதுகாப்பாக நிரந்தரமான மூடி அமைத்திட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் உள்ளதா என்பதை மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, அவ்வாறு பாதுகாப்பற்ற பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடிட வேண்டும்.