கிருஷ்ணகிரி, அக்.25: மகாராஜகடைக்கு இரவு நேரத்தில் வந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி ஒன்றிய மதிமுக ஒன்றிய செயலாளர் டைகர் முருகன் தலைமையில், அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் தனியார் பஸ்கள், மகாராஜகடை வழியாக செல்லாமல் அரசு கலைக்கல்லூரி வழியாக செல்கிறது. இதனால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள், பணியின் காரணமாக தினமும் கிருஷ்ணகிரி நகருக்கு வந்து செல்கின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகின்றனர். மகாராஜகடை வழியாக இந்த பஸ்களை இயக்க வேண்டும் என பலமுறை கலெக்டர் அலுவலத்தில் கோரிக்கை மனு அளித்தும் இன்று வரை இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை.