சிவகாசி, அக். 24: சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே கேட் பகுதியில், ரயில் வரும் நேரங்களில், இருபுறமும் வாகன ஓட்டிகள் காத்திருந்து அவதிப்படுகின்றனர். எனவே, மண் பரிசோதனையோடு கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மேற்கு பகுதி சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், ஹவுசிங் போர்டு, இந்திரா நகர், ஸ்டேட் பேங்க் காலனி, இ.பி.காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் சிவகாசியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் ரயில்வே கேட்டை கடந்து நகருக்குள் வரவேண்டும். இதேபோல, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்களும் நகருக்குள் வருவதற்கு ரயில்வே கேட்டை கடந்துதான் வரவேண்டும். இந்நிலையில், காலை 8.40 மணிக்கு ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. அதன்பின் மீண்டும் ரயில்வே கேட்டை திறக்க 15 நிமிடம் ஆகிறது. காலையில் மதுரை-செங்கோட்டை செல்லும் ரயில், சிவகாசியை கடந்து செல்ல, ரயில்வே கேட் மூடப்படுகிறது. மீண்டும் திறப்பதற்குள் நூற்றுக்கணக்கான வாகனங்களும், டூவீலர்களும் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. ரயில்வே கேட் திறந்தவுடன் வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் முண்டியத்து, கடந்து செல்வதற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போதும், போதும் என்றாகி விடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.