தென்காசி, அக். 17: குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழாவில் நேற்று சித்திர சபையில் நடராச மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. நாளை(18ம் தேதி) விசு தீர்த்தவாரி நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி தேரோட்டம், நேற்று முன்தினம் காலை மற்றும் மாலையில் நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. நேற்று காலையில் சித்திர சபையில், நடராச மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சிவனடியார்களின் சிவபூதகண வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. தாண்டவ தீபாராதனையை ஜெயமணிசுந்தரம் பட்டர் தலைமையில் கணேசன் பட்டர், பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர் ஆகியோர் நடத்தினர்.