தர்மபுரி, அக்.15:தர்மபுரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு, உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் 2019 கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையும் காலாண்டிற்கு, தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர், உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை பெற, கல்வித் தகுதியை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஓராண்டு நிறைவு செய்திருத்தல் வேண்டும். தலித், பழங்குடியின பிரிவினருக்கு, கடந்த மாதம் 30ம் தேதி அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ₹72 ஆயிரம் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.