பெரம்பூர்: சென்னையில் மெரினா கடற்கரை, விளையாட்டு மைதானங்கள் மற்றும் வீட்டு மொட்டை மாடிகளில் பலர் காற்றாடி விட்டு வந்தனர். இந்த காற்றாடியின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து பலர் இறந்தனர். எனவே, காற்றாடி விடுவதற்கு தடை கோரி, சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனபேரில், சென்னை பெருநகர காவல் துறை சார்பில், சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி பறக்க தடை விதிக்கப்பட்டது. கடைகளில் மாஞ்சா நூல், காற்றாடி விற்கக்கூடாது எனவும், மீறி விற்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும், தடையை மீறி பல இடங்களில் காற்றாடி பறக்கவிட்ட மற்றும் விற்பனை செய்த பலரை போலீசார் கைது செய்தனர். இதனால் சென்னையில் காற்றாடி கலாச்சாரம் ஓரளவுக்கு ஓய்ந்தது. இந்நிலையில், தற்போது வடசென்னை பகுதிகளில் மீண்டும் காற்றாடிகள் பறக்கவிடப்படுகிறது. குறிப்பாக புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி பி.வி காலனி, புளியந்தோப்பு கன்னிகாபுரம் மற்றும் பி.எஸ் மூர்த்தி நகர், ஜமாலியா பகுதிகளில் பலர் காற்றாடிகளை பறக்க விடுகின்றனர்.