சென்னை: பெங்களூருவில் இருந்து கோயம்பேடு வந்த சீன நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி இன்று வருவதையொட்டி கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பஸ்சில் வந்து இறங்கிய சீனாவை சேர்ந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவரது பெயர் ஜிம்மின் (27) என்பதும், சீனாவைச் சேர்ந்த இவர், சீனாவில் இருந்து பெங்களூரு வந்ததாகவும், அதன் பிறகு சென்னைக்கு வந்ததாகவும், அடையாறில் உள்ள கார் கம்பெனிக்கு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, அந்த கம்பெனியில் இருந்து ஊழியர்களை வரவழைத்து விசாரணை செய்தபிறகு அந்த நபர் அலுவலக விஷயமாக வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் அனுப்பி வைத்தனர்.