சேலத்தில் பள்ளிக்கு சென்ற அண்ணன்-தம்பி உள்பட 3 மாணவர்கள் திடீர் மாயம்

சேலம், அக்.10: சேலத்தில் பள்ளிக்கு சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் அம்மாப்பேட்டை புகையிலைமண்டி சின்னமுத்து உடையார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ்(15). இவர் வையாபுரி தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல அம்மாப்பேட்டை ஏர்வாடிஆசாரி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்கள் சிவலிங்கம்(14) 9ம்வகுப்பும், கோபி(13) 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நண்பர்களான 3 பேரும், நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றனர். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று விசாரித்த போது அவர்கள் பள்ளிக்கே வரவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து எல்லா இடங்களிலும் தேடி பார்த்தும், கண்டுபிடிக்க முடியாததால் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். விசாரணையில்,  இவர்கள் கடந்த 2 நாட்களாக சென்னைக்கு செல்லலாம் என பேசி வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்து ₹4 ஆயிரம் மற்றும் செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும்  எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மாநகர் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதே போல சென்னை போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: