ஓசூர்,அக்.10: ஓசூர் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், அனைத்து கிராம பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி, எழில்நகர், பாகூர், கோவிந்த அக்ரகாரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிறுப்புகள் உள்ளது. விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர்கள் நிறைந்து காணப்படும் இப்பகுதியில், கடந்த சில நாட்களாக மக்கள் காய்ச்சல் பாதிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தும் வகையிலும் கிராமங்கள் தோறும் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேகேப்பள்ளி கிராமத்தில் நேற்று சுகாதார துறையினர் அப்பகுதி மக்களின் குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டனர்.