ஆலங்குளம் அருகே கிடப்பில் பாலப்பணி

ஆலங்குளம், அக். 4: ஆலங்குளம் அருகே கிடப்பில் போடப்பட்ட பாலப்பணியால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி - ஊத்துமலை சாலையில், வெண்ணிலிங்கபுரம் - கம்மாவூர் இடையே கடந்த இருபது நாட்களுக்கு முன்பு புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இதற்காக குழிகள் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், இவ்வழியாக வாகனம் செல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட மாற்றுவழியும் சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், மருத்துவமனை செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சகதிகாடான மண் சாலையில் செல்லும் வாகனங்கள் பதிந்து விடுவதால் பல்வேறு இடையூறுகளை பொதுமக்கள் சந்திக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கிடப்பில் போடப்பட்ட பாலத்தின் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: