திருச்சுழி, அக். 1: திருச்சுழி அருகே, சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி செல்லும் சாலையில் சவ்வாசுபுரம் மற்றும் குள்ளம்பட்டி கிராமங்களுக்கு சாலை பிரிந்து செல்கிறது. இந்த இரண்டு கிராமங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சவ்வாசுபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலையோரம் கல்குவாரி பள்ளம் உள்ளது. இதில் தடுப்புச்சுவர் உயரம் குறைவாக இருந்தது. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் இருந்தது. மேலும், தடுப்புச்சுவர் உடைந்த நிலையில் இருந்ததால், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் அனுப்பியும், நடவடிக்கை இல்லை. இது குறித்து கடந்த ஜூன் மாதம் நமது நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது.