வேளச்சேரி: பள்ளிக்கரணை மற்றும் தாம்பரத்தில் ஐ.டி ஊழியர் உள்ளிட்ட இருவர் வீடுகளின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பள்ளிக்கரணை பரசுராம் நகர் அடுக்குமாடி குடியிருப்பு முதல் தளத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் முனீர் உசைன் (40). தி.நகர் தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலூரில் உள்ள தனது தங்கையை அழைத்து வருவதற்காக முனீர் உசைன் தனது குடும்பத்தோடு வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முனீர் உசைன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன் மற்றும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவான கொள்ளையர்களின் கைரேகையை எடுத்து சென்றனர்.