தாம்பரம், செப்.24: தாம்பரம், செம்பாக்கம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள், பயோ மைனிங் முறையில் குப்பை குவியலை அப்புறப்படுத்தும் பணிகளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மாநில திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி நேற்று ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் முஜிபுர் ரகுமான், மண்டல பொறியாளர் முருகேசன், தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையாராஜா, சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர் ஆல்பட் அருள்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் நடைபெறும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகள் மற்றும் பயோ மைனிங் முறையில் குப்பைகள் அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் நீதிபதி பி.ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கு பிறகு சுற்று சூழலில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஊட்டியில் பிளாஸ்டிக் தடையை மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குப்பை தற்போது தங்கம் போன்றது, சாதாரணமாக புறக்கணிக்கும் பொருள் கிடையாது. குப்பைகளை தரம் பிரித்து அதில் இருந்து பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.