ஆலந்தூர்: சென்னை மாவட்ட வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களின் குறைகேட்கும் முகாம் கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலத்தில் நடந்தது. இந்த முகாமிற்கு, சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி தலைமை வகித்தார். ஆர்டிஓ நாராயணன், மற்றும் தாசில்தார்கள், கவுத்தி, செந்தில், ராஜேஸ்வரி, சுப்ரமணியன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள செங்கேணியம்மன் கோயிலுக்கு சொந்தமான 5 சென்ட் இடத்தினை வருவாய் துறையினர் தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டதாகவும், இந்த பட்டாவினை ரத்து செய்யக்கோரி அந்தப்பகுதி பொதுமக்கள் மனுகொடுத்தனர். அதேபோல் பள்ளிக்கரணை தாய்நகர் நலச்சங்கத்தினர் தாய் நகரில் மழைநீர் கால்வாய் அமைத்து தரும்படியும், மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மனை பட்டா கேட்டு அலைவதாகவும், திருவான்மியூரை சேர்ந்த முத்துமாலை, விஜயா ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக விதவை பென்ஷன் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை என்றும் இம்முறையாவது பென்ஷன் கிடைக்க ஏற்பாடு செய்யும் படி மனு கொடுத்தனர். தி.நகரை சேர்ந்த சக்தி என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மனு கொடுத்தார். இவ்வாறு 300க்கும் மேற்பட்ட மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.