கிருஷ்ணகிரி, செப்.15: ராயக்கோட்டை அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 31 பயனாளிகளுக்கு ₹4.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை தாலுகா ராயக்கோட்டை அருகே உள்ள எச்சனஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குணசேகரன் தலைமை வகித்தார். தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முகாமில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 7 பேருக்கு ரேஷன் கார்டு, 2 பேருக்கு வாரிசு சான்று, 5 பேருக்கு பட்டா மாறுதல், 4 பேருக்கு தோட்டக்கலை துறை மூலம் சொட்டுநீர் பாசன கருவிகள், 5 பேருக்கு வேளாண்மைத்துறை மூலம் பனை விதைகள் என மொத்தம் 31 பேருக்கு ₹4 லட்சத்து 21 ஆயிரத்து 477 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.