கிருஷ்ணகிரி, செப்.15: தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம், தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐசிஏஆர் வேளாண்மை அறிவியல் மையமானது கோமாரி நோய், கருச்சிதைவு நோய் மற்றும் செயற்கை கருவூட்டல் முகாமானது காவேரிப்பட்டணம் ஒன்றியம் நடுப்பையூர் கிராமத்தில் நடந்தது. வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் மனோகரன், கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் செயற்கை கருவூட்டல் முறையின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை கூறி கையேடுகளை வழங்கினார். கால்நடை துறை உதவி இயக்குநர் டாக்டர் அருள்ராஜ், கால்நடைகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு மற்றும் கன்று சிதைவு நோய்களை கட்டுப்படுத்தும் முறைகளை எடுத்துரைத்தார்.