கிருஷ்ணகிரி, செப்.15: கிருஷ்ணகிரியில் புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள 17பி ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் துவங்கிய இந்த பேரணியை, மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். பேரணியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, நிதி காப்பாளர் நாராயணன் ஆகியோர் தலைமையேற்று வழிநடத்தினர்.