கிருஷ்ணகிரி, செப்.15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 759 வழக்குகளில் ₹7.74 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மீனாசதீஷ் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கலாவதி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் அறிவொளி, சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மணி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி மற்றும் அனைத்து நீதிபதிகளும், வக்கீல்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.