பல்லாவரம்: பல்லாவரம் அருகே உள்ள ஆயில் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில், பம்மல் நாகல்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கம்பெனியில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குத் தேவையான என்ஜின் ஆயில்களை டேங்கர் லாரிகளில் மொத்தமாக வாங்கி வந்து, அதனை ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் வரை தனித்தனியாக பிரித்து கேன் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து அதனை ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வழக்கம் போல் ஆயில்களை பாக்கெட்களில் அடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் மதிய வேளை உணவிற்காக அனைவரும் கேன்டீன் சென்றிருந்தனர். அப்போது, பாக்கெட்களில் அடைப்பதற்காக தயாராக பேரல்களில் பிடித்து வைத்திருந்த ஆயில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.