கிருஷ்ணகிரி, செப்.10: சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மயானத்தை மீட்டுத்தர கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில், சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மோட்டப்பா, வீரப்பா உள்ளிட்டோர் தலைமையில் வந்த பொதுமக்கள், கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியிருந்ததாவது: மருதாண்டப்பள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தனியாக மயானம் உள்ளது. தற்போது இந்த மயானத்தை ஓய்வுபெற்ற கிராம உதவியாளரான பாப்பண்ணா மகன் லட்சுமணன் என்பவர், ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, இறந்தவர்களின் உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என கூறுகிறார். இதை தட்டிக்கேட்டால் கத்தி மற்றும் உருட்டுக்கட்டை எடுத்துகொண்டு வந்து தாக்க முயற்சிக்கிறார்.