கிருஷ்ணகிரி, ஆக.22: வேப்பனஹள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சைல்டுலைன் 1098 குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு சைல்டுலைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி தலைமை வகித்தார். திட்ட ஆலோசகர் ஹேமாமாலினி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை விஜயா வரவேற்றார். முகாமில், 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், இளம் வயது திருமணங்கள், குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் ரீதியான துன்புறுத்தல், வீட்டை விட்டு ஓடிப்போகுதல், குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.