கிருஷ்ணகிரி, ஆக.22: சின்னமுத்தூரில் பயன்பாட்டில் இல்லாத பள்ளி வகுப்பறை கட்டிடத்தில், பகுதி நேர கால்நடை மருத்துவமனை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரிப்பட்டணம் ஒன்றியம் சின்னமுத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுண்டேகுப்பம், கம்பளிக்கான்கொட்டாய், ஆரிபூசாரிக்கொட்டாய், பச்சைக்கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 65 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். போதுமான வகுப்பறை கட்டிடங்கள் உள்ள நிலையில், கடந்த 2011-12ம் ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7.20 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்து 9 ஆண்டுகளாகியும், புதிய கட்டிடம் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. மாணவ, மாணவிகளுக்கு தேவையான வகுப்பறை கட்டிடங்கள் ஏற்கனவே உள்ளதால், இந்த கட்டிடத்தில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.