மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கும் மணலி சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர்: சென்னையில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் எண்ணூர் விரைவு சாலை வழியாக மணலி சாலையை கடந்து மாதவரம், மணலி, புதுநகர், மீஞ்சூர் போன்ற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்து, கன்டெய்னர் லாரி, கார், பைக் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மணலி சாலையில் எர்ணாவூர் மேம்பாலத்தில் இருந்து எம்எப்எல் சந்திப்பு வரை சாலையின் நடுவே அமைத்துள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இந்த மின்விளக்குகளை திருவொற்றியூர் மண்டல மின்சார பிரிவு அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக இந்த மின்விளக்குகளில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யவில்லை.  இதனால் கனரக வாகனங்கள் வேகமாக செல்லும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும், போக்குவரத்து போலீசார் சில சமயங்களில் கனரக வாகனங்களை முறைப்படுத்தும் பணியை செய்யும்போது சாலை நடுவில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அது போன்ற நேரங்களில் இருள் சூழ்ந்து இருப்பதால் போலீசார் நிற்பது தெரியாமல்  வாகனங்கள் அவர்கள் மீது இடித்து விபத்து ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதுபோல் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் ஒருவர் லாரி மோதி உயிரிழந்தார். எனவே உடனடியாக மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் இந்த சாலையில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: