சாத்தூர், ஜூன் 25: சாத்தூர் அருகே, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், குடிநீர் விநியோக முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம், சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சிவகுமார், சாந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘எம்.எல்.ஏ ராஜவர்மன் பேசுகையில், ‘சாத்தூர் தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆலோசனையின் பேரில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளிலும் பழுதடைந்த மின்மோட்டார்கள், அடிபம்புகளை சீரமைக்க வேண்டும். புதிய போர்வெல், குடிநீர் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள் அமைக்க என் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். சாத்தூர் தொகுதியில் சிறந்த ஊராட்சி ஒன்றியமாக வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை மாற்ற வேண்டும்’ என்றார். பின்னர் பொதுமக்களிடம் மனு வாங்கினார்.