மீனம்பாக்கம்: இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சர்புதீன் அலி (57), அப்துல் சமது (51) ஆகிய 2 பேர் சுற்றுலா பயணியாக இலங்கைக்கு சென்று சென்னை திரும்பி வந்தனர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 2 பேரின் சூட்கேசில் உள்ள ரகசிய அறையில் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்து மொத்தம் 930 கிராம் தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ₹31.5 லட்சம். இதனை அடுத்து சுங்க அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.