நாகை, ஜூன் 19: சரக்குகள் ஏற்றி செல்லும் வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்று உயிருக்கு உளை வைப்பதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நாகை பழைய பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன் ஆகிய இடங்களில் இருந்து மேலவாஞ்சூர் ரவுண்டானா வரை இயக்கப்படும் ஆட்டோக்களின் எண்ணிக்கை சொல்ல முடியாது. இந்த ஆட்டோக்களுக்கு போட்டியாக சரக்குகளை ஏற்றி செல்லும் மினி லாரியில் பயணிகளை ஏற்றி செல்லும் நிலை நாகையில் உள்ளது. அதிலும் காலை நேரங்களில் பார்த்தால் முதலாவது கடற்கரை சாலை, தோணித்துறை ஆகிய இடங்களில் அதிக அளவில் உள்ளது. பயணிகளும் தங்களது ஆபத்தான பயணத்தை உணராமல் ஏதே பணத்தை மிச்சம் செய்வதாக நினைத்து கொண்டு இப்படிப்பட்ட சரக்கு ஏற்றும் வாகனங்களில் ஏறி செல்கின்றனர். இதை போலீசாரும் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்வதும் இல்லை. வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது இல்லை.