திருவொற்றியூர்: திருவொற்றியூர் 7வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சாலை பள்ளங்களில் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி காயமடைகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை பெரியார் நகர் சாலையில் திரண்டு, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவொற்றியூர் மண்டல செயற்பொறியாளர் வேலுச்சாமி மற்றும் மணலி போலீசார் கண்ணகி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். அப்போது பொதுமக்கள் “நாங்கள் பல நாட்களாக சாலை அமைக்க கோரிக்கை வைத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று செயற்பொறியாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.