சென்னை: தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து கடந்த 2 நாட்களில் ₹3.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தடும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் தனி குழுக்கள் அமைக்கப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக சட்டதிருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.