விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆலங்குளம், ஜூன் 19: ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து மேலத்தெருவை சேர்ந்தவர் அந்தோணி கோவில் பாக்கியம் (41). ஆலங்குளம் ரேஷன் அரிசி குடோனில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 16ம் தேதி மனைவி மேகலாவுடன் நல்லூருக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பினார். நெல்லை - தென்காசி சாலையில் தனியார் மில் அருகே செல்லும்போது எதிரே வந்த லாரி, அந்தோணி பைக் மீது மோதியது. இதில் தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு  காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை அந்தோணி கோவில் பாக்கியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: