நெல்லை, ஜூன் 18: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் பிரிப்பில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி கடங்கனேரி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு விபரம் வருமாறு: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 14ல் பெரும்பாலும் கடங்கனேரி ஊராட்சி வாக்காளர்களை இடம் பெற்றிருந்தனர். எங்கள் கிராமத்து வாக்காளர்கள் அனைவரும் ஒன்றாக 14வது வார்டில் போட்டியிடுவோருக்கு வாக்கு செலுத்தி வந்தோம். எங்கள் கடங்கனேரி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது வார்டு வரையறை என்ற பெயரில் எங்கள் கிராமத்தில் ஒரு பகுதியினர், சுமார் 800 பேர் வார்டு எண் 11 காவலாக்குறிச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாங்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.