சங்கரன்கோவில் ஜூன்18: சங்கரன்கோவிலில் வாணியர் ஊரணியை ஆக்கிரமித்து தடுப்பு சுவர் அமைத்து கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். சங்கரன்கோவில் நகராட்சி முதல்நிலை நகராட்சியாகும். இங்கு சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் 22 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
மேலும் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் ஓத்துழைப்புடன் தனியார் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, நகரின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகள் பராமரிப்பின்றி மழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க கூட முடியாத அவல நிலையில் உள்ளது. சங்கரன்கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க மறந்து போன நகராட்சி நிர்வாகம் நகரில் பேருந்துநிலையம், திருவேங்கடம் சாலை, பேருந்துநிலையம் அருகே உள்ள வாட்டர் டேங்க் அருகில், கழுகுமலை சாலையில் பொதுமக்கள் நடைபாதையாக இருந்த இடம் ஆகியவற்றில் திடீரென கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.