பெரம்பூர், ஜூன் 18: காசிமேடு பகுதியில் இருந்து தமிழக, ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற 7 பேர் மாயமாகினர். அவர்களது நிலை என்னவென்று தெரியாததால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.சென்னை காசிமேடு காசிபுரத்தை சேர்ந்த மீனவர் நந்தன் (65) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பால்ராஜ் (50), ஸ்டீபன் (32), துரை (55), கருத்தக்கண்ணு (65), புகழேந்தி (59), மதி (59), மற்றொரு மதி (50) ஆகிய 7 பேரும் கடந்த 4ம் தேதி மீன் பிடிப்பதற்காக தமிழக, ஆந்திர மாநில கடலோர பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால், 13 நாட்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லை. இவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி விசை படகு உரிமையாளர் நந்தன் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் மீன்வளத்துறை இயக்குனரகம் மற்றும் மீன்பிடி துறைமுக போலீசில் கண்ணீர் மல்க புகார் செய்தனர். அப்போது, மீன்பிடிக்க சென்ற மேற்கண்ட 7 மீனவர்களும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்களை உடனடியாக கண்டுபிடித்து கொடுங்கள் என்று தெரிவித்து இருந்தனர்.