புழல்: குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புழல் பொப்பிலிராஜா அரசு மேல்நிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜாவித் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட கலந்து கொண்டனர்.
இதில் ‘‘இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதிக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்ற வரை பாடுபடுவேன்” என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதேப்போல் புழல் காந்தி தெருவில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சரளா தலைமையிலும், புழல் கண்ணப்பசாமி நகர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாலதி தலைமையிலும், சூரப்பட்டு அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையிலும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் கதிர்வேடு, புத்தாகரம், வடகரை, செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.