வி.கே.புரம், ஜூன் 13: அரபிக்கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ‘வாயு’ புயலாக மாறியது. இதையடுத்து நேற்றுமுன்தினம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, திருச்சூர் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 4 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தென்காசி, குற்றாலம், பாபநாசம், புளியங்குடி, சிவகிரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இடைவிடாத சாரல் மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலான மழை இருந்தது. கன்னியாகுமரியில் பலத்த மழை பெய்தது. இடைவிடாத சாரல் மழையால் குற்றாலத்தில் நேற்றுமுன்தினம் முதல் சீசன் அபாரமாக துவங்கியது. மெயினருவியிலும், ஐந்தருவியிலும் தண்ணீர் விழத் துவங்கியது. ஆனால் புலியருவியிலும், பழைய குற்றாலத்தில் இன்னும் தண்ணீர் விழவில்லை. இந்நிலையில் அரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் குறைந்தது. கடந்த 2 நாட்களாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து 2555 கனஅடியிலிருந்து 559 அடியாக குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2.40 அடியே உயர்ந்து 33.40 அடியாக உள்ளது.